Sunday, 1 May 2016

கவிதைக்கு சொந்தக்காரி - சில குறிப்புகள்...

மார்கழி மாதமொன்றின் அதிகாலையில தொலைபேசி வழியே என் இதயம் நுழைந்தவள்.

தேவதைகளின் நிறம் கறுப்பென்று வெள்ளை நிற தேவதைகளை ஓரம் கட்டியவள்.

அனிச்சமலர் மனசுக்குள் ஆயிரமாயிரம் வண்ணத்துப்பூச்சிகள் பறக்க வைத்தவள்.

மின்னஞ்சல் பெட்டியை முத்தங்களால் நிரப்பி சத்தமின்றி யுத்தமொன்றை நடத்தியவள்.

கொஞ்சிக் கொஞ்சி என்னைக் கொன்றுதின்ற பிஞ்சுமன வஞ்சியவள்.

பூங்குயில் குரலால் இறைபாடல் பாடுகின்ற குழந்தைமன பெண்ணவள்.

 
என் இதயசிம்மாசனத்தில் நிரந்தர அரசியாய் வீற்றிருக்கும் சாக்லெட்டில் செய்த ரோஜாமலரவள்.

இதயத்தில் துவங்கிய காதல் கண்களின் சந்திப்பைக்காண ஏழுமாதம் தவமிருந்தவள்.

முதல் சந்திப்பில் மொழி மறந்து பேச தவித்த பொழுதில் கண்சிமிட்டாமல் சிலையானவள்.

கனவுகளுடன் திரிந்தபோது என் கனவுகளை தன் கண்ணில் சுமந்து துணையிருந்தவள்.

சொல்லித் தெரிவதில்லை காதலென்று மான்விழி பார்வைகளால் உணர்த்தியவள்.

கவர்ந்து சென்று வாழ பொருள்தேடி தலைநகரம் 
நான் பயணித்த காலத்தில் கையசைக்காமல் கண்ணசைத்து வழியனுப்பியவள்.

என் கையெழுத்தும் கவிதை என்று கடிதமெழுதிய அவள் பேனாவின் மைத்துளிக்குள் தன் காதலைச் சுமந்தவள்.

வேலைகிடைத்த செய்தியை சொல்வதற்கு தொலைபேசியில் அழைத்தபோது அழுதுகொண்டே வாழ்த்தியவள்.

அழுகையின் காரணமறியாமல் ஆனந்த கண்ணீரென்று நான் நினைத்து மலர்ந்த இரவொன்றில் தொலைபேசியில் அழைத்தவள்.

நீண்ட மெளனம் உடைத்து திருமணம் நிச்சயக்கப்பட்ட செய்தியை செவிக்குள் சொல்லியழுதவள்.

தவித்து,துடித்து,துவண்டு,அழுது,அடங்கி,வதங்கிய பூவாக மணமேடை ஏறியவள்.

சிறகுகளை இழந்துவிட்டு சிலுவைகளை சுமந்துகொண்டு மறுவீடு சென்ற ஊமைக்குயிலவள்.

வானத்தை இழந்துவிட்ட நிலவு இன்று எங்கோ ஒரு கானத்தில் காதல் தந்த நினைவுகளுடன் மட்டும் வாழ்கிறது.

பொருளாதாரச் சூறாவளியில் சிக்கி தொலைந்த காதல் இன்று சட்டைப்பையிலிருந்து வழிகின்ற வெள்ளிக்காசுகளை கவனிக்காமல்
அவள் நினைவுகளின் கனத்தை தள்ளாடியபடி சுமந்து பயணிக்கிறது.



கீழ்.கா.அன்புச்செல்வன்.

No comments:

Post a Comment