வா மீன்டும் துவங்களாம் நம் காதல் பயனத்தை
சில நிகழ்வுகள் வருடங்கள் கடந்தும் இனித்துக் கொண்டுதான் இருக்கின்றன பருகிய காஃபியின் சுவை சில மணித்துளிகள் உதட்டிலேயே ஒட்டியிருப்பது போல..
ஒரு மாலை நேரத்தில் தோழி வீட்டு ஜன்னலோரத்தில் நிலைக்கண்ணாடியில் உன் முகம் காண வரம் தந்தாய்...
பிறிதொருநாள் சந்தித்தோம் அண்ணா என்றழைத்தாய் அடிபாவி அழைக்காதே அப்படி என்றேன் அந்த உறவு உன் தோழிகளுக்கு மட்டுமே உரித்தானது..
மீண்டும் மீண்டும் சந்தித்தோம் பார்வையாலே பேசினோம் பழகினோம் பேருந்து பயணம் பேரின்ப பயணமானது
மணித்துளிகள் நாட்களாயின நாட்கள் வாரங்களாயின வாரங்கள் மாதங்களாயின காதல் என்ற வார்த்தையை உபயோகிக்காமலே காதலை உணர்ந்தோம்..
ஒவ்வொருமுறை
நீ சாமி கும்பிடும் போதும்
"நீ கும்பிட கும்பிட
அழகாகிக் கொண்டிருக்கிறான் முருகன்"
என்ற தபூசங்கரின் வரிகள்தான் நினைவில் வரும்...
நீ கால் நனைத்து விளையாடிய குளக்கரை படிநீரும் நீ வீசும் பொறி உண்ண தாவி வந்த மீன்களும் நம் காதலுக்கு சாட்சிகளாயின...
நம்மை கடந்து செல்லும் ரயிலை போல சில நாட்கள் என்னை தடதடக்க வைத்தாய் சிலநாட்கள் விண்ணை தாண்டி பறக்க வைத்தாய்...
ஒருமுறை மூன்றுநாள் பிரிவை கூட தாங்காமல் ஓடோடி வந்தேன் உனை காண பின்னொரு காலத்தில் வருடக்கணக்கில் பிரிவோம் என்றறியாமல்...
இதே போன்றதொரு நந்நாளில் உன் கைப்பையிலிருந்து களவாடிய குழந்தை பருவ புகைப்படத்தை மெருகேற்றி பரிசளித்தேன் அவ்வளவு கூட்டத்திலும் மீண்டும் குழந்தையாகிப் போனாய்....
கத்தரிக்காய் மட்டுமல்ல காதலும் முத்தினால் வீதிக்கு வந்துதான் ஆக வேண்டும் நம் காதலும் வந்தது...
உன் வார்த்தைகள் வென்றன அழைத்தார்கள் உன் வீட்டில,் கூடிப் பேசினோம் வாக்களித்தேன் விரைவில் இணைவோமென்று...
எல்லாவற்றையும் நாமே முடிவு செய்தால் இறைவன் எதற்கு? இரை தேடும் பறவை போல் பறக்க விட்டான் பொருள் தேடி...
பிரிவுக்காக வருந்தவில்லை நாம் பிரிந்திருக்கும் ஒவ்வொரு நாளும் இணையப்போகும் நாளுக்கான இடைவௌியை குறைக்கின்றது
வலியும் பிரிவும் இல்லாத காதல் கதைகள் வெற்றி பெற்றதாய் வரலாறு இல்லை இந்த வலியும் பிரிவும் கருகும் ஒருநாள் நம் மணமேடை யாக நெருப்பில்...
கோபத்தில் நினைவுச் சின்னங்கள் அழியலாம் நினைவுகள் அழிவதில்லை...
வா மீண்டும் துவங்கலாம் நம் காதல் பயணத்தை....
கீழ்.கா.அன்புச்செல்வன்
No comments:
Post a Comment